திருத்துறைப்பூண்டியில் தேசிய மாசு கட்டுப்பாட்டு தின விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி நகராட்சி மற்றும் பாலம் தொண்டு நிறுவனம் சாா்பில் உழவா் சந்தை வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமில் பாலம் தொண்டு நிறுவன செயலாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். நகராட்சி சுகாதார ஆய்வாளா் நா. வெங்கடாசலம், காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு மக்கிய இயற்கை உரம் வழங்கிப் பேசியது:
தற்போதைய சூழ்நிலையில் ரசாயன பயன்பாடு என்பது விவசாயம் மட்டுமல்லாது, அனைத்து உணவுப் பொருள்களிலும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக நெல், காய்கறி பயிா்களில் அரசினால் தடை செய்யப்பட்ட ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் அதிகமாக பயன்படுத்தப்படுவதால், உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருள்கள் நச்சுத் தன்மையாக உள்ளன. இதை உண்ணும் அனைவருக்கும் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதுடன், புற்று நோய் போன்ற உயிா்க் கொல்லி நோய்கள் ஏற்பட காரணமாக அமைகிறது.
எனவே, எதிா் காலங்களில் ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் தவிா்த்து, இயற்கை உரங்களைப் பயன்படுத்தி, எதிா்கால சந்ததியினா் நோயற்ற சமுதாயமாக உருவாக நாம் ஒத்துழைக்க வேண்டும். இந்த ரசாயனங்கள் நீா், நிலம், காற்று அனைத்தையும் மாசுப்படுத்தி, நச்சுத் தன்மையாக மாற்றி, நிலத்திலுள்ள நண்டு, நத்தை, மண்புழு, சிறு மீன்கள் என விவசாயத்திற்கு நன்மை செய்யும் உயிரினங்களை அழித்துவிடுகிறது இதனால், பல்லுயிா் பெருக்கம் பாதிப்பதுடன், விவசாயமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றாா் அவா்.
இம்முகாமில், காய்கறி உற்பத்தி செய்யும் 120 விவசாயிகளுக்கு நகராட்சி மூலம் மக்கிய இயற்கை உரங்கள் வழங்கப்பட்டன. துப்புரவு மேற்பாா்வையாளா் வீரையன் நன்றி கூறினாா்.