திருவாரூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரியில் அறிவியல் தொழில்நுட்ப மேம்பாடு தொடர்பான 3 நாள் பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி நிறுவனங்கள் ஆகியவை இணைந்து இந்த பயிலரங்கை நடத்தின.
இந்தப் பயிலரங்கில், பள்ளி மாணவர்களுக்கான சோலார் பயன்பாடு, சூரிய வெப்ப ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் முறை, செல்லிடப்பேசியைப் பயன்படுத்தும் முறை மற்றும் சரி செய்யும் முறை, நெல் வகைகள் மற்றும் அதன் பயன்கள், நீர் மேலாண்மை, நீரை சுத்திகரிக்கும் முறைகள், கால்நடைப் பராமரிப்பு முறைகள், மண்புழு உரம் தயாரிப்பு மற்றும் பயன்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
பயிலரங்கில் இயற்கை வேளாண் ஆர்வலர் வரதராஜன், இயற்கை விவசாயப் பயிற்றுநர் பி.வி. உதயகுமார், நேதாஜி தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர் ப. முருகதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்று மேற்கண்ட தலைப்புகளில் பேசினர்.
இக்கருத்தரங்கில் பங்கேற்றோருக்கு, கல்லூரி முதல்வர் பி.எஸ். மீனாட்சி, துணை முதல்வர் ஆர். அறிவழகன் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர்.
வேதியியல் துறைத் தலைவர் சு. பவுன்யா, கணிதத்துறைத் தலைவர் எ. சுடர்விழி ஆகியோர் கருத்தரங்கை ஒருங்கிணைத்தனர்.