வலங்கைமான் அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
வலங்கைமான் அருகேயுள்ள சாலபோகம் கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (29). இவர், திங்கள்கிழமை பாபநாசம் கடைவீதியிலிருந்து உத்தமதானபுரம் வழியாக சாலபோகம் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த டிராக்டர் மோதி படுகாயமடைந்தார். உடனடியாக தினேஷ்குமார் மீட்கப்பட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தினேஷ்குமாரை பரிசோதித்தபோது, ஏற்கெனவே உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, வலங்கைமான் போலீஸார் வழக்குப் பதிந்து விபத்தை ஏற்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்து ஓட்டுநரை தேடிவருகின்றனர்.
மற்றொரு விபத்து: தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள துறைகொண்டார் கோட்டையைச் சேர்ந்த சாமிநாதன் மகன் ஹரிஹரன் (21). இவர், பாபநாசம் அருகேயுள்ள ரெகுநாதபுரம் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்நிலையில், ஹரிஹரன் திங்கள்கிழமை சாலியமங்கலத்திலிருந்து பாபநாசம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, மதகரம் பேருந்து நிறுத்தம் அருகே டிராக்டர் மோதி படுகாயமடைந்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, வலங்கைமான் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.