மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகத்தின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு பொறியாளர்களை ஆய்வுக்கு அனுப்பியுள்ளதற்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்தை அழிக்கும் நோக்கோடு ஏற்கெனவே மேக்கேதாட்டு அணைக்கட்ட திட்ட வரைவு ஆய்வறிக்கையை தயார் செய்ய கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்தது.
தற்போது, தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அந்த ஆய்வறிக்கையை மத்திய நீர் பாசனத் துறையிடம் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ளதாகவும், அதை ஏற்று, அத்துறையின் பொறியாளர்கள் பிப்ரவரி 23- ஆம் தேதி முதல் மேக்கேதாட்டு பகுதியை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து வருவதாகவும் கர்நாடக நீர்பாசனத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மக்களவைத் தேர்தலுக்கானஆயத்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், மோடி அரசும், கர்நாடக முதல்வர் குமாரசாமியும் தமிழகத்தை அழிக்க கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்நடவடிக்கை குறித்து, தமிழக அரசு தெளிவுப்படுத்த வேண்டும். உடனடியாக தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, இப்பிரச்னை தொடர்பாக விவாதிக்க வேண்டும். அணைக்கட்ட அனுமதி வழங்க முயற்சிக்கும் மோடி அரசின் துரோக நடவடிக்கையை தடுத்து நிறுத்த முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி முன் வரவேண்டும். கஜா புயலால் விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலையில், விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடன் வசூல் என்கிற பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் விவசாயிகளை அச்சுறுத்தி வருகின்றன. இதைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என அந்த அறிக்கையில் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.