மன்னார்குடி அருகே செவ்வாய்க்கிழமை குளத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார்.
மன்னார்குடி அருகே உள்ள கண்டிதம்பேட்டை மேலத்தெருவைச் சேர்ந்த இளங்கோவன் மகன் கலையரசன்(32). இவர், அதே பகுதியில் உள்ள புதுக்குளத்தில் செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்குத் திரும்பாததால், உறவினர்கள் குளத்துக்குச் சென்று பார்த்தபோது, கலையரசனின் உடைகள் மட்டும் கரையில் இருந்தன. அவரை காணவில்லை.
எனவே, கலையரசன் நீரில் மூழ்கியிருக்கலாம் என மன்னார்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் அப்பகுதியினர் குளத்தில் இறங்கி தேடினர். நீண்ட நேர தேடலுக்குப் பின், கலையரசன் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து, பரவாக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.