நீடாமங்கலத்தில் இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் கடையில், ரூ. 71 ஆயிரம் ரொக்கத்தை திருடிச்சென்றவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
நீடாமங்கலம் பேரூராட்சிக்குள்பட்ட கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆனந்த பாபு. இவர் நீடாமங்கலம்- தஞ்சை சாலையில், இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடை வைத்துள்ளார். வழக்கம்போல், கடந்த 2-ஆம் தேதி இரவு கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, கடையின் பின்பக்க தகர கொட்டைகையை மர்ம நபர்கள் பெயர்த்து எடுத்து, கடையில் வைத்திருந்த ரூ.71 ஆயிரத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.
புகாரின்பேரில், நீடாமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் பாலமுத்தையா மற்றும் போலீஸார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர்.