திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த பெருகவாழ்ந்தானில், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்காமல் தாமதப்படுத்துவதைக் கண்டித்து, சனிக்கிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெருகவாழ்ந்தான் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் கஜா புயல் நிவாரணம் வழங்கப்படுவதாக சனிக்கிழமை தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, ஊராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள்
திரண்டனர்.
நீண்ட நேரமாகியும் நிவாரணப் பொருள்கள் வழங்கப்படாததால், நிவாரணம் வழங்கப்படுவதாக கிடைத்த தகவல் வதந்தி என்பதை உணர்ந்த பொதுமக்கள், மன்னார்குடி- முத்துப்பேட்டை பிரதான சாலையில், அரசு நடுநிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். பெருகவாழ்ந்தான் காவல் ஆய்வாளர் சுப்ரியா, கிராம நிர்வாக அலுவலர் கனகராஜ் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டது. இதன்பேரில், மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால், மன்னார்குடி- முத்துப்பேட்டை சாலையில் 2 மணிநேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.