திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகேயுள்ள ஸ்ரீபொதுஉடையார் கோயிலில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பகல்நேர தரிசனம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
கோயிலில், அதிகாலையில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பரக்கலக்கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீபொதுஆவுடையார் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட மக்களுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்கி வருகிறது. தென்சிதம்பரம் , தென்தில்லை என்று அழைக்கப்படும் இத்தலத்தில் தில்லைநடராஜர் இருதுறவிகளுக்கிடையே ஏற்பட்ட பிரச்னையை மத்தியஸ்தம் செய்து வைத்ததால் ஸ்ரீமத்தியபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயிலில், வாரந்தோறும் திங்கள்கிழமை நள்ளிரவில் மட்டுமே நடை திறக்கப்பட்டு நள்ளிரவு பூஜை மட்டுமே நடைபெறுவது வழக்கம். சிதம்பரத்தில் ஸ்ரீநடராஜர் அர்த்தசாம பூஜையை முடித்துக்கொண்டு இத்தலத்துக்கு வருவதாக காலம் காலமாக ஐதீகமாக உள்ளது. பகல் நேரங்களில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கோயிலின் பிரதான வாசலில் உள்ள கதவில் மாலைகளை சார்த்தி வெளியில் நின்று வழிபட்டுவிட்டு செல்கிறார்கள். தைத் திங்கள் முதல் நாள் சங்கராந்தி பொங்கல் தினத்தன்று ஒரு நாள் மட்டும் கோயில் பகலில் தரிசனத்துக்கு திறக்கப்படும்.அதன்படி செவ்வாய்க்கிழமை மகரசங்கராந்தி அன்று பகல்நேர தரிசனத்தையொட்டி சுயம்புவடிவிலான பொதுஆவுடையாருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை தஞ்சை மண்டல இந்து சமய அற நிலைய ஆட்சித் துறை இணை ஆணையர் க.தென்னரசு, உதவி ஆணையர் செ. சிவராம்குமார்ஆகியோர் மேற்பார்வையில் பரம்பரை அறங்காவலர் சடகோபராமானுஜம், இணை அறங்காவலர் ராமானுஜம் , கோயில் செயல்அலுவலர் சம்பத்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.