பொங்கல் பண்டிகையையொட்டி ஆலங்குடி குருபகவான் கோயிலில் செவ்வாய்க்கிழமை சூரிய வழிபாடு நடைபெற்றது.
நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் குருபரிகார கோயிலில் பொங்கல் பண்டிகையையொட்டி, செவ்வாய்க்கிழமை சூரிய பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யப்பட்டது. முன்னதாக, கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேசுவரர், ஏலவார்குழலியம்மன், மூலவர் குருபகவான் உள்ளிட்ட அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதேபோல், நீடாமங்கலம் சந்தான ராமர் கோயில், காசிவிசுவநாதர் கோயில், மகா மாரியம்மன் கோயில், கோகமுகேஸ்வரர் கோயில், பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பொங்கல் பண்டிகையையொட்டி, நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவாரூரில்...
பொங்கல் திருநாளை முன்னிட்டு, திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் உள்ள சிவசூரிய பகவானுக்கு சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் உள்ள சிவசூரிய பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதில் திரவியப்பொடி, மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற திரவியங்களால் இந்த அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, சிவசூரிய பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
கூத்தாநல்லூரில்...
கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள கோயில்களில் பொங்கல் பண்டிகையையொட்டி, செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
லெட்சுமாங்குடி மரக்கடை கல்யாணசுந்தரேசுவரர் கோயிலில் மூலவர் கல்யாண சுந்தரேசுவரர், மங்களாம்பிகை, பண்டுதக்குடி வாஸலாம்பிகா சமேத உமாபதீஸ்வரர் கோயில், வேளுக்குடி ருத்ரகோட்டீஸ்வரர் கோயிலில் பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதேபோல், கம்பர் தெரு நீலகண்டேஸ்வரருக்கும், காக்கையாடியில் கைலாசநாதருக்கும், சாத்தனூரில் காளகஸ்தீஸ்வரருக்கும், திருராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமிக்கும், அதங்குடியில் விருப்பாட்சிஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, லெட்சுமாங்குடி சாய்பாபா கோயில் தியான பீடம் ஷீரடி சாய்பாபா, சித்தாம்பூர் சாய்பாபா கோயில், லெட்சுமாங்குடி - கொரடாச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள ஜெயசக்தி ஆஞ்சநேயர்,வேளுக்குடி பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில், ஸ்ரீதேவி, பூமாதேவி சமேதர் லெஷ்மி நாராயணன், சீதா, ராமர்,லட்சுமணன் மற்றும் தெற்கு பார்த்த ஆஞ்சநேயர் என கூத்தாநல்லூர் வட்டத்தில் உள்ள கோயில்களில் அரிசி மாவு மஞ்சள் பொடி,சந்தனம்,இளநீர், பன்னீர்,பால்,தேன்,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அனைத்து திரவியங்களாலும் அபிஷேகம் செய்யப்பட்டது.