மன்னார்குடியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியானதையத்து அவர் யாரென்று இரு நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை தெரியவந்தது.
மன்னார்குடி எம்ஜிஆர் நகரில் ஜன.14-ஆம் தேதி காமராஜ் என்பவரின் வீட்டு இரும்பு கேட்டின் மீது கம்பியில் குத்திய நிலையில் இளைஞர் ரத்தகாயத்துடன் உயிரிழந்த நிலையில் கிடந்தார். அவர், யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. மின்சாரம் பாய்ந்து உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. இதையடுத்து, மன்னார்குடி போலீஸார் அந்த இளைஞரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், இறந்தவரின் புகைப்படம் சமூக ஊடகங்கள் மூலம் (கட்செவி) வெளியிடப்பட்டது. இதன்பயனாக, உயிரிழந்து கிடந்தவர் மன்னார்குடி அன்னவாசல் சேனியத்தெரு சிவசுப்பிரமணியன் (39) என்பதும், ஐந்து ஆண்டுக்கு மேலாக திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாகவும்,கடந்த சிலநாள்களுக்கு முன் மன்னார்குடி வந்தது முதல் மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இருந்ததாகவும் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.