முத்துப்பேட்டையில் பொங்கல் விளையாட்டு விழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இருவரை போலீஸார் தேடிவருகின்றனர்.
முத்துப்பேட்டை மருதங்காவெளிப் பகுதியில் பொங்கல் விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த மந்திரமூர்த்தி மகன் வீரபாண்டியன் தரப்பினருக்கும், காசிநாதன் மகன் அஜய் தரப்பினருக்கும் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜேஷ், உதவி ஆய்வாளர் கணபதி மற்றும் போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று, இருதரப்பினரையும் அமைதிப்படுத்தினர். இந்த மோதல் தொடர்பாக, வீரபாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, காசிநாதன் மகன் அஜய் (19), செல்வராஜ் மகன் பிரகாஷ் (21), பரசுராமன் மகன் ஹரிஹரன் (20), செல்வராஜ் மகன் மணிகண்டன் (20) ஆகிய நால்வரை போலீஸார்
கைது செய்தனர்.
இதேபோல், அஜய் கொடுத்த புகாரின் பேரில், 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து மந்திரமூர்த்தி மகன் வீரபாண்டியன் (24), சுப்பிரமணியன் மகன் சுதாகர் (20) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், சங்கர் மகன் ரவி (21), ஜெயசந்திரன் மகன் மாதவன் (20)ஆகியோரைத் தேடிவருகின்றனர்.