மன்னார்குடியில் செயல்பட்டு வரும் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில், திங்கள்கிழமை கால்நடைகளுக்கு இலவச தீவனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மன்னார்குடி வ.உ.சி.சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் பி. ரமேஷ் தலைமை வகித்தார். கால்நடை மருத்துவமனைக்கு பல்வேறு சிகிச்சைகளுக்காக அழைத்து வரப்பட்ட கால்நடைகளுக்கு அதன் உரிமையாளர்களிடம் ஒரு கிலோ எடையுள்ள மாட்டு தீவனம், மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கால்நடை உதவி இயக்குநர் ஐ. தனபால் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
திட்டத்தின் நோக்கம் குறித்து, ரோட்டரி சங்க திட்ட இயக்குநர் மருத்துவர் வி. பாலகிருஷ்ணன் விளக்கினார்.
இதில், சங்க முன்னாள் தலைவர்கள் கே. திருநாவுக்கரசு, ஜி. மனோகரன், சங்கச் செயலர் மாரியப்பன், பொருளாளர் ஜெ. வெங்கேடஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.