ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் அருகே கடலில் மீன் பிடிக்கும்போது, காணாமல்போன 4 மீனவர்களில் ஒருவரது சடலம், முத்துப்பேட்டை கடற்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை கரை ஒதுங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அந்தோணி, ஸ்டீபன், சிம்தாஸ், மினோன் ஆகிய 4 மீனவர்கள் கடந்த 4-ஆம் தேதி பாம்பன் அருகே கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, சூறைக்காற்று வீசியதால் படகு கவிழ்ந்து 4 பேரும் கடலில் மூழ்கினர். இவர்களைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், கடந்த 7-ஆம் தேதி பாம்பன் அருகே நடுக்கடலில் தத்தளித்த அந்தோணி, ஸ்டீபன் ஆகியோரை சகமீனவர்கள் மீட்டனர். மற்ற இருவரையும் கடலோர காவல்படையினர் தேடிவந்தனர்.
இதற்கிடையில், திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கடற்கரைப் பகுதியில் ஆண் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. முத்துப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் இனிக்கோ திவ்யன் தலைமையிலான போலீஸார் அந்த சடலத்தை மீட்டு,விசாரணை மேற்கொண்டதில், பாம்பனில் காணாமல்போன மீனவர் சிம்தாஸின் சடலம் எனத் தெரியவந்து. இதையடுத்து, சிம்தாஸின் சடலம் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.