அடியக்கமங்கலம் பகுதியில் பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழக கிளைச் செயலர் ஹாஜா மெய்தீன் அளித்த கோரிக்கை மனு விவரம்: திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட பகுதி பாசன வாய்க்கால்கள், தூர்வாராமல் சாக்கடை கழிவுநீர் செல்லும் வாய்க்கால்களாக மாறி உள்ளன. இதனால் அங்கு வசிப்பவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் பெரும்பாலான வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமாகி, வாய்க்கால் சுருங்கி சில இடங்களில் வாய்க்கால் காணாமலும் போய்விட்டன. எனவே, உடனடியாக பாசன வாய்க்கால்களில் கழிவு நீர் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி, சுத்தம் செய்து, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.