சம்பளப் பட்டியல் மென்பொருளில் ஏற்பட்டுள்ள குளறுபடியை சரி செய்யக்கோரி திருவாரூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சம்பளப் பட்டியல் தயாரிக்க, குளறுபடிகளுடன் கூடிய மென்பொருள் உள்ளதாகவும், அதை சரிசெய்யாமல், அதன்படியே பட்டியலை கருவூலத்தில் வழங்க வேண்டும் என வற்புறுத்துவதைக் கண்டித்தும் பழைய முறைப்படியே சம்பளப் பட்டியலை தயாரித்து கருவூலத்தில் வழங்கக் கோரியும் திருவாரூரில் மாவட்ட கருவூல அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜி. பைரவநாதன் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் செளந்தரராஜன், மாவட்டச் செயலர் சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.