மன்னார்குடி அருகேயுள்ள காரிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ரூ. 1 லட்சம் மதிப்பில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
காரிக்கோட்டையை சொந்த ஊராக கொண்டு தற்போது பணி நிமித்தமாக சிங்கப்பூரில் இருக்கும் நண்பர்கள் குழு சார்பில், ரூ. 1 லட்சம் நிதி நன்கொடையாக அளிக்கப்பட்டு, அந்த தொகையிலிருந்து ஊராட்சி தொடக்கப் பள்ளிக்கு தேவையான கல்வி உபகரணங்கள் வாங்கப்பட்டன. அவ்வாறு, வாங்கப்பட்ட பீரோ, நாற்காலி, ஒலி-ஒளி பரப்பும் திரைக் கருவி, எழுதுப் பொருள்கள், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை பெத்த பெருமாள் கோயிலிலிருந்து கிராம பொதுமக்கள் சீர்வரிசையாக பள்ளிக் கூடத்துக்கு எடுத்து வந்தனர். பின்னர், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பெற்றோர் கழக ஆசிரியர் கழகத் தலைவர் ரங்கராஜ் தலைமை வகித்தார்.
அப்போது, பள்ளித் தலைமையாசிரியர் சித்ராவிடம் சீர்வரிசையாக எடுத்து வந்த கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதில், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் அன்பு ராணி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் வாணி ஜெயந்தி, ஆசிரியர்கள் தமிழ்மலர், பாப்பாத்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.