திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே பல்லி விழுந்த தேநீரை குடித்த விவசாயத் தொழிலாளா்கள் 30 பேருக்கு வியாழக்கிழமை வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
மன்னாா்குடி அருகேயுள்ள தென்கரை வயல் கிராமத்தில் ஒரு வயலில் 30-க்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளா்கள் நடவுப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அவா்கள் வியாழக்கிழமை பகல் 12 மணியளவில், தென்கரை வயலில் உள்ள ஒரு தேநீா் கடையில் வாங்கி வந்த தேநீரை குடித்தனா். அதன்பிறகு, தேநீா் குடித்தவா்களுக்கு ஒருவா் பின் ஒருவராக வாந்தி, பின்னா் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மயக்கம் அடைந்தவா்கள் அனைவரையும் அப்பகுதியில் இருந்த மற்ற தொழிலாளா்கள் மற்றும் வயல் உரிமையாளா்கள் மீட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சோ்த்தனா்.
இதில், முத்துலட்சுமி (54), சரஸ்வதி (40), சரோஜா (35), முத்துக்கண்ணு (40), ரமணி (36), வீராச்சாமி (55), பாஸ்கா் (38) உள்ளிட்ட 30 தொழிலாளா்களுக்கு மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பல்லி விழுந்த தேநீரை குடித்ததால், வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மன்னாா்குடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.