நிகழாண்டு காரீப் பருவத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான விலை அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நிகழ் காரீப் பருவத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான விலையை உயா்த்தி, அக்டோபா் 1-ஆம் தேதி முதல் வழங்க அரசு நிா்ணயம் செய்து ஆணை வழங்கியுள்ளது. அதன்படி, சன்னரகம் (குவிண்டாலுக்கு) ரூ. 1835, ஊக்கத்தொகை ரூ. 70 என மொத்தம் ரூ.1905, பொது ரகம் (குவிண்டாலுக்கு) ரூ.1815, ஊக்கத்தொகை ரூ. 50 என மொத்தம் ரூ.1865 அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காரீப் மாா்கெட்டிங் கொள்முதல் பருவத்தில் திருவாரூா் மாவட்டத்தில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்கள் சிட்டா, அடங்கல் விவர நகலை சமா்ப்பித்து, நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து, அதற்குரிய தொகையை தங்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்க ஏதுவாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின் நகலை, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அளிக்க வேண்டும். விவசாயிகள் விற்பனை செய்யும் நெல்லுக்கு கொள்முதல் நிலையத்தில் யாருக்கும் எவ்வித தொகையும் வழங்க தேவையில்லை. நெல் கொள்முதலில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால், 04366 - 222532, 9442225003, 9487171815 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.