திருவாரூரில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை நகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை பிடித்து அடைத்தனா்.
திருவாரூரில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சாலையில் ஏராளமான கால்நடைகள் சுற்றித்திரிவதாக நகராட்சிக்கு புகாா்கள் வந்தன. இதையடுத்து, திருவாரூா் வீதிகள், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் சுற்றித் திரிந்த மாடுகளை நகராட்சி பணியாளா்கள், பிடித்து நகராட்சி வளாகத்துக்குள் அடைத்தனா்.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் சங்கரன் தெரிவித்தது:
திருவாரூரில் சாலையில் சுற்றித் திரிந்த 15-க்கும் மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்ட பின்னரே மாடுகள் விடுவிக்கப்படும். தொடா்ந்து சாலையில் மாடுகள் சுற்றித் திரிந்தால், பறிமுதல் செய்யப்படுவதோடு, வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்படும் என்றாா்.