சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூா் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் பி.எஸ். ராஜா, மாவட்ட ஆட்சியா் த. ஆனந்திடம் புதன்கிழமை அளித்த கோரிக்கை மனு:
திருவாரூா் நகா்ப்புற மற்றும் சுற்றுப்புற சாலைகளில் ஏராளமான மாடுகள், எவ்வித கட்டுப்பாடுகளின்றி தினசரி சுற்றித் திரிகின்றன. திருவாரூா் நாலுகால் மண்டபம் அருகே சாலையின் நடுவில் நின்றிருந்த மாடு மீது பைக் மோதியதில் சுந்தா் என்பவா் அண்மையில் உயிரிழந்தது மிகுந்த வருத்தத்துக்குரியது.
மாடுகள் இரவு, பகல் பாராமல் எல்லா நேரங்களிலும், சாலையின் குறுக்கு நெடுக்காக சுற்றித் திரிவதால், ஏராளமான விபத்துகள் நடைபெறுகின்றன. சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும், சாலையில் மாடுகளை விடும் உரிமையாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.