மன்னார்குடி அக்கரை நடராஜ முதலியார் தெருவில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
அக்கரை நடராஜ முதலியார் தெரு செல்வ விநாயகர் கோயிலுக்கு குடமுழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டதை அடுத்து, கோயிலில் பாலாலயம் செய்து, கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் அனைத்துப் பணிகளும் முடிவடைந்தன.
இதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை கோயில் வளாகத்தில் யாக குண்டம் அமைத்து, கணபதி, லெட்சுமி, நவ கிரக ஹோமம் வளர்க்கப்பட்டு, வழிபாடு, வேள்வி ஆகியவை மூன்று கால பூஜையில் செய்யப்பட்டன.
வியாழக்கிழமை, விக்னேஸ்வர பூஜையில் தொடங்கி நான்காம்கால பூஜையும், மகா பூர்ணாஹுதியும், புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடும் நடைபெற்றது.
பின்னர், ஊர்வலமாக எடுத்து வந்த புனித நீரை, வேதமந்திரங்கள் முழங்க சிவஸ்ரீ சிவசுப்ரமணிய சிவாச்சாரியாரால், கோயில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.