திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே ஞாயிற்றுக்கிழமை வேன் மோதி கவிழ்ந்ததில், இந்திய கம்யூனிஸ்ட் கிளைச் செயலாளர் உயிரிழந்தார். 20 பேர் காயமடைந்தனர்.
வலங்கைமான் வட்டத்துக்கு உள்பட்ட கருப்பட்டிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாசாமி (55). இந்திய கம்யூனிஸ்ட் கிளைச் செயலாளரான இவர், ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டிலிருந்து சைக்கிளில் ஆலங்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது, சிதம்பரத்திலிருந்து மதுக்கூர் நோக்கிச் சென்ற வேன் ஒன்று வலங்கைமான் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில், சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது மோதாமல் இருக்க, வேன் ஓட்டுநர் பிரேக்கை அழுத்தினாராம். இதில், வேன் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே சைக்கிளில் வந்த அய்யாசாமி மீது மோதி, சாலையில் கவிழ்ந்தது.
இதில், அய்யாசாமி அவ்விடத்திலேயே உயிரிழந்தார். வேனில் வந்த சிதம்பரத்தைச் சேர்ந்த கருணாநிதி, காமராஜ், பாக்கியலெட்சுமி, அம்பிகா, அமுதா உள்ளிட்ட 20 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு நீடாமங்கலம் அரசு மருத்துவமனை மற்றும் ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். வலங்கைமான் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.