தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கிளை சார்பில், அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு சனிக்கிழமை நடைபெற்ற மூவிங் கியர் விழிப்புணர்வுப் பயிற்சியில், பேருந்து ஓட்டுநர்கள் பேருந்து நிலையங்களின் உள்ளே மூவிங் கியரில் மட்டுமே பேருந்தை இயக்க
அறிவுறுத்தப்பட்டனர்.
மயிலாடுதுறை பழைய மற்றும் புதிய பேருந்து நிலைங்களில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பயிற்சியில், பேருந்து நிலையத்தின் உள்ளே பேருந்து ஓட்டுநர்கள் மூவிங் கியரான முதல் கியரை மட்டுமே பயன்படுத்தி பேருந்தை இயக்க வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசுப் பேருந்து கும்பகோணம் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மற்றும் மண்டல மேலாளர் அறிவுறுத்தலின் பேரில், நாகை கோட்ட மேலாளர் பி.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சியில், ஓட்டுநர்கள் பேருந்து நிலையத்தில் முதல் கியரை பயன்படுத்தி மட்டுமே பேருந்தை இயக்க வேண்டும், மூவிங் கியரில் இயக்குவதால் பயணிகள் நடந்தே சென்று பேருந்தில் ஏறமுடியும் என்றும், இதனால் விபத்துகள் தவிர்க்கப்படுவதோடு, டீசலுக்கான செலவீனமும் வெகுவாக குறையும் என்றும் விழிப்புணர்வுப் பயிற்சியில் செயல்முறை விளக்கத்துடன் அறிவுறுத்தப்பட்டது.
இதில், விபத்து ஆய்வு பொறியாளர் எம்.தனபால், தொழில்நுட்ப பொறியாளர் வி.குமரவேல், கிளை மேலாளர் டி.கபிலன் மற்றும் ஓட்டுநர் பயிற்சி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.