திருத்துறைப்பூண்டி அருகே உள்ள சேகல் ஊராட்சியில் நடைபெறும் கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் சனிக்கிழமை டிஜிட்டல் இந்தியா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இம்முகாம், சேகல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முகாமின் 5- ஆம் நாளான சனிக்கிழமை, டிஜிட்டல் இந்தியா என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்துக்குப் பள்ளியின் தலைமையாசிரியர் மு.ச. பாலு தலைமை வகித்தார். திருத்துறைப்பூண்டி இந்தியன் ஜூனியர் சேம்பர் தேசியப் பயிற்றுநர் வி.எஸ். கோவிந்தராஜன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியது:
இந்தியாவில் தற்போது அனைத்து துறைகளுமே டிஜிட்டல் மயமாகி வருகிறது. இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான ரயில்வே துறை முழுவதும் டிஜிட்டல் மயமாகி உள்ளன. ரயில் வரும் நேரத்தை செல்லிடப்பேசி மூலம் அறியலாம். வங்கிகளில் பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டன. எனவே, இதற்கான பயிற்சியை இந்த முகாம் உங்களுக்கு அளிக்கும். ஆகவே, இந்தப் பயிற்சியை நீங்கள் சிறப்பாக கற்று, சமுதாயத்தில் மாற்றத்தைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டும் என்றார் அவர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சி. சந்திரசேகரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் செ. முகந்தன், பா. ரகு, வி. இளங்கோவன், கே. நேரு, ஏ. ஆனந்தகுமார், எல்ஐசி கிளை காசாளர் மா. தசரதன் மற்றும் சேகல் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர். நாட்டுநலப்பணித் திட்ட உதவி அலுவலர் ஏ. ஐயப்பன் நன்றி கூறினார்.