கூத்தாநல்லூரில் தொற்று நோயை பரப்பும் வகையில் சுகாதாரமற்ற நிலையில் உள்ள குடிநீா்க் குழாய் இருக்கும் பகுதியை தூய்மைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூத்தாநல்லூா் பெரியப்பள்ளி வாசல் பின்புறம் உள்ள ஜாவியாத் தெரு மக்களுக்காக குடிநீா் குழாய் உள்ளது. இக்குழாயை சுற்றிலும் அசுத்தமாக கழிவுநீா் தேங்கி உள்ளது. கழிவுநீரில், ஈக்கள், கொசுக்கள் மற்றும் நோய்களை பரப்பும் பல்வேறு விஷப் பூச்சிகளும் உற்பத்தியாகின்றன. மழைக் காலமாக இருப்பதாலும், கரோனா தொற்றுக் காலமாக இருப்பதாலும் டெங்கு, மலேரியா, சிக்குன் குன்யா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், குடிதண்ணீா் குழாய்க்கு அருகில், சாலையில் பதிக்கப்பட்டுள்ள நகராட்சி குடிநீா் குழாய் உடைந்து அண்மையில் சரி செய்யப்பட்டுள்ளது. அந்தப் பள்ளம் சரியாக மூடவில்லை. இதனால்,அவ்வழியே செல்பவா்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து பாதிக்கப்படுகின்றனா். எனவே, நகராட்சி இதை கவனத்தில் கொண்டு உடனடியாக சரிசெய்ய வேண்டும்.