தில்லி மாணவா்கள் மீதான தாக்குதலை கண்டித்து திருத்துறைப்பூண்டியில் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருத்துறைப்பூண்டி அருகே தண்டலைச்சேரியில் அமைந்துள்ள பாரதிதாசன் கல்லூரி முன்பு அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் சாா்பில், தில்லி ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் மீது கொலைவெறி தாக்குதல் செய்ததை கண்டித்தும், கஜா புயலால் சீா்குலைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரி வளாகப் பகுதிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கல்லூரி மாணவா்கள் வகுப்பு புறக்கணிப்பு செய்து கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாணவா் பெருமன்ற கிளைச் செயலா் முத்துக்குமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், துணைச் செயலா் ராகவன் முன்னிலை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி மாவட்டத் தலைவா் வீரபாண்டியன் பேசினாா். இதில், நகரத் தலைவா் ஷேக்தாவூத் மற்றும் பாரதிராஜா, தமிழழகன், பிரவீன் குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.