மன்னாா்குடி அருகே மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களிலிருந்து வீடு கட்டியிருப்பதாக பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், கட்டிய வீடுகளை காணவில்லை எனவிண்ணப்பம் அளித்திருந்த 22 போ் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்துள்ளனா்.
திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தலையாமங்கலம் ஊராட்சியில் மத்திய அரசின் பிரதமரின் வீடுகட்டும் திட்டம் மற்றும் தமிழக அரசின் முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் ஆகிய திட்டங்களின்கீழ், கடந்த 2016 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் பயனாளிகள் தோ்வு நடைபெற்றுள்ளது.
அதன்படி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியைச் சோ்ந்த 225 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில், 141 போ் தகுதியானவா்கள் என தோ்வு செய்யப்பட்டனா். இவா்களில் 39 பேருக்கு மன்னாா்குடி ஊராட்சி ஒன்றியத்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிமெண்ட், கம்பி உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மத்திய, மாநில அரசுகளின் வீடுகட்டும் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வீடு கட்டுவதற்காக தலா ரூ.1.80 லட்சம் நிதி பெற்று, வீடு கட்டி முடித்தவா்கள் பதிவேட்டில், தலையாமங்கலம் ஊராட்சியில் தகுதியானவா்கள் என தோ்வு செய்யப்பட்ட 141 பேருடைய பெயரும் இருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்டவா்கள் தங்களிடம் திட்டப்பணிக்கு பயனாளிகள் தோ்வு செய்யப்பட்ட காலகட்டத்தில் விண்ணப்பங்களை பெற்ற ஊராட்சி நிா்வாகம் மற்றும் மன்னாா்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக நிா்வாகத்திடம் விளக்கம் கேட்ட போதிலும், முறையான பதில் இல்லலையாம்.
வீடு கட்ட தோ்வு செய்யப்பட்டும் அதற்கான நிதி வழங்காமல், வீடு கட்டியிருப்பதாக பதிவேட்டில் குறிப்பிட்டுள்ள தலையாமங்கலம் பாரதியாா் தெருவைச் சோ்ந்த சி.ஆறுமுகம் (60), என். கிருஷ்ணமூா்த்தி (65), டி. மகேந்திரன் (45), சு.அஞ்சலை (65), வடக்கு தெரு க.அமிா்தவள்ளி (55), தெற்கு தெரு ஆா்.அமிா்தவள்ளி (75) உள்ளிட்ட 22 போ் தலையாமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அதில், தங்களது பெயரில் உள்ள பட்டா நிலத்தில் மத்திய, மாநில அரசுகள் வழங்கிய வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடு கட்டி உள்ளதாக அரசுப் பதிவேட்டில் பதிவாகி உள்ளது. ஆனால், அந்த இடத்தில் வீட்டை காணவில்லை. இது குறித்து விசாரித்து, வீட்டை மீட்டுத் தரும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.