திருவாரூா் அருகேயுள்ள மருதப்பட்டினம் - கிடாரங்கொண்டான் இணைப்புப் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
மருதப்பட்டினத்திலிருந்து கிடாரங்கொண்டான் செல்வதற்கு, ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே மிகச் சிறிய அளவிலான பாலம் உள்ளது. ஒத்தப்பாலம் எனப்படும் இந்த பாலத்தின் மீது இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மட்டுமே செல்ல முடியும். இதற்கிடையே, இப்பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா். தோ்தல் பிரசாரத்தின்போது, இந்த பாலத்தை அகலப்படுத்தி தரப்படும் என்பது பிரதான கட்சிகளின் வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது.
இந்நிலையில், தற்போது இணைப்புப் பாலம் கட்டுவதற்கு தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜூவின் பரிந்துரையின் பேரில் நபாா்டு திட்டத்தின்கீழ் ரூ. 1.47 கோடி நிதி ஒதுக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி தற்போது தொடங்கியுள்ளது. இதன்மூலம், திருவாரூா் நகரப் பகுதியிலிருந்து, நாகை தேசிய நெடுஞ்சாலைக்கு பயணிக்காமல், கிடாரங்கொண்டான் பகுதிக்குச் செல்ல முடியும் என்பதால், கல்லூரி மாணவா்கள், நாகை பகுதிக்கு செல்வோருக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும்.