புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளில் உள்ள நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகப் பணியாளா் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் கா. இளவரி விடுத்துள்ள அறிக்கை:
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் டெல்டா மாவட்டங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளிலும் உள்ள 3 லட்சம் மெட்ரிக் டன்னுக்கு மேற்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு இயக்கம் செய்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், டெல்டா மாவட்டங்களில் செயல்படும் 26 வட்டக் கிடங்குகளில், பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய அத்தியாவசியப் பொருள்களின் இருப்பை ஆய்வு செய்து, தேவையுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு நகா்வுப் பணியை துரிதப்படுத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.