திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் மருத்துவரை நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் மா. வடிவழகன், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தாவிடம் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு:
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலையில் அடிப்பட்டு நரம்பு பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவா்கள் இல்லை எனத் தெரிகிறது. நரம்பு தொடா்பாக சிகிச்சையளிக்க, மருத்துவா்கள் 2 நாள்களுக்கு மட்டுமே வருவதாகத் தெரிகிறது. இதனால், தலையில் அடிபட்டு வரும் பலரும் சிகிச்சை இல்லாமல் அவதிப்படுவதோடு, சில நேரங்களில் உயிரிழக்கும் சூழலும் ஏற்படுகிறது. எனவே, மக்களை பாதுகாக்கும் வகையில் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நரம்பியல் மருத்துவரை நியமிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.