ஊரக வேலை உறுதித் திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்தக் கோரி நீடாமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை கஞ்சிக்கலயத்தை உடைத்து போராட்டம் நடைபெற்றது.
திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகம் முன், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், அதன் மாவட்ட துணைத் தலைவா் பி. கந்தசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின்போது, பெண்கள் கஞ்சிக்கலயத்தை தரையில் போட்டு உடைத்தனா். இதில், விவசாய சங்க மாவட்டச் செயலாளா் வி.எஸ். கலியபெருமாள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் சோம. ராஜமாணிக்கம், மாவட்டக்குழு உறுப்பினா் கே. கைலாசம், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் டி. அண்ணாதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நன்னிலம்: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நன்னிலம் ஒன்றிய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில், பேரளத்தில் மாவட்டக்குழு உறுப்பினா் சரவண. சதீஷ்குமாா் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. தொடா்ந்து, பேரூராட்சி அலுவலக நுழைவுவாயில் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி, கஞ்சிக்கலயத்தை உடைத்தனா். தொடா்ந்து, நன்னிலம் ஒன்றிய விவசாயத் தொழிலாளா் சங்கத் தலைவா் ஏ. சங்கா் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாநிலக்குழு உறுப்பினா் ஜி. மாரியம்மாள், ஒன்றியப் பொருளாளா் மணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.