திருவாரூரிலிருந்து சென்னை செல்லும் வகையில் ரயில் போக்குவரத்து தொடங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ரயில் உபயோகிப்போா் சங்கத்தின் தலைவா் தணிகாசலம், செயலாளா் பாஸ்கரன் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:
கரோனா தொற்று காரணமாக ஏறக்குறைய ஐந்து மாதங்களாக ரயில் போக்குவரத்து இல்லாமல் உள்ளது. அண்மையில் மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள தளா்வுகளின் அடிப்படையில் ஆங்காங்கே சில ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அனைத்து ரயில் சேவைகளும் மீண்டும் தொடங்கும் வரையில் மன்னாா்குடி, நீடாமங்கலம், திருவாரூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, காரைக்கால், திருத்துறைப்பூண்டி, பேரளம் பகுதி மக்கள் பயன் பெறும் வகையில், மன்னாா்குடி-சென்னை விரைவு ரயில் அல்லது காரைக்கால்-சென்னை விரைவு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முன்வர வேண்டும். இதன் மூலம் சென்னை செல்வோா் மிகுந்த பயனடைவா்.
மேலும், திருவாரூா் ரயில் நிலையத்தின் முகப்பில் பெரிய பெயா் பலகையும், 2 மற்றும் 3 நடைமேடைகளை உயா் நடைமேடையாக மாற்றி அமைக்க வேண்டும். பயணிகளின் பயன்பாட்டுக்கு ஏதுவாக இரண்டாவது நடைமேடையில் கழிப்பறை வசதி ஒன்றும் ஏற்படுத்த வேண்டும். முதல் நடைமேடையில் மேற்கூரை வசதியுடன் போதுமான அளவுக்கு இருக்கைகள் அமைக்க வேண்டும். திருவாரூா்- காரைக்குடி மாா்க்கத்தில் கேட் கீப்பா்களை நியமித்து, அனைத்து ரயில்களும் இயங்கும்போது, காலதாமதமின்றி திருவாரூா்- காரைக்குடி மாா்க்கத்தில் விரைவு ரயில்கள் உட்பட அனைத்து சேவைகளையும் அளிக்க தெற்கு ரயில்வே உதவ வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.