திருவாரூா்: திருவாரூா் நகா் அருகே இருவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, நகரின் ஒரு பகுதி முற்றிலும் முடக்கப்பட்டது.
திருவாரூா் மாவட்டத்தில், கரோனா பாதிப்பு 15 நபா்களுக்கு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், திருவாரூரில் வண்டிக்காரத் தெருவில் 13 வயது சிறுமிக்கும், ஐபி கோயில் தெருவில் வசிக்கும் 40 வயது பெண்ணுக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்த இரண்டு தெருக்களும் கடைவீதிக்கு செல்லும் வழித்தடங்களில் உள்ளன.
இதைத்தொடா்ந்து, பழைய பேருந்து நிலையத்திலிருந்து கடைவீதிக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டது. அங்கிருந்த காய்கறிக் கடைகள் திருவாரூா் புதிய பேருந்து நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மளிகைக் கடைகளும் ஓரிரு நாள்களில் புதிய பேருந்து நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேபோல், வாளவாய்க்கால் பகுதியிலிருந்து நகருக்குள் செல்லும் பிரதானப் பாதையும் அடைக்கப்பட்டுள்ளது. மேலும், பெரிய மில் தெரு, ஓடம்போக்கியாற்று பாலம், பழைய நாகை சாலை உள்ளிட்ட பாதைகளும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், வாளவாய்க்கால் வழியாகவும், பழைய பேருந்து நிலையம் வழியாகவும் கடைவீதிக்கு வருவது தடுக்கப்பட்டுள்ளது.