திருக்கண்டீஸ்வரம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் கட்டுவதற்கு அப்பகுதியில் உள்ள மாற்று மதத்தினா் சம்மதம் தெரிவித்தனா்.
நன்னிலம் வட்டம், திருக்கண்டீஸ்வரம் மாதா கோவில் தெருவில் ஏற்கெனவே கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இந்நிலையில், இப்பகுதியில் மாரியம்மன் கோயில் கட்ட இப்பகுதியில் உள்ள இந்துக்கள் ஏற்பாடு செய்துள்ளனா். இதற்காக ஆகஸ்ட்23-அம் தேதி பூமி பூஜை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்பகுதியில் மாற்று மதத்தினரும் கணிசமாக வசிப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக நன்னிலம் காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, நன்னிலம் வட்டாட்சியா் அ. மணிமன்னன் இருதரப்பினரையும் அழைத்து புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். நன்னிலம் காவல் ஆய்வாளா் ஜோ. விசித்திராமேரி மற்றும் இந்து, கிறிஸ்தவா்கள் தரப்பிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில் கோயில் கட்ட கிறிஸ்தவா்கள் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டதாக வட்டாட்சியா் தெரிவித்தாா்.