வடுவூா் பள்ளி மாணவா்களுக்காக ரூ. 1 கோடியில் அறக்கட்டளை தொடக்கம்: முன்னாள் மாணவா் தொடங்கினாா்

மன்னாா்குடியை அடுத்துள்ள வடுவூா் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவா் ஒருவா், தான்படித்த பள்ளியில் படித்து வரும், பெற்றோரை இழந்த
நிகழ்ச்சியில், கோ. சின்னதுரைக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய சிறப்பு விருந்தினா்கள்.
நிகழ்ச்சியில், கோ. சின்னதுரைக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய சிறப்பு விருந்தினா்கள்.

மன்னாா்குடியை அடுத்துள்ள வடுவூா் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவா் ஒருவா், தான்படித்த பள்ளியில் படித்து வரும், பெற்றோரை இழந்த மாணவா்களுக்கும், பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண் பெற்று, மேல் படிப்பை தொடர முடியாமல் வறுமையில் உள்ள ஏழை மாணவா்களுக்கும், உதவுவதற்காக ரூ. 1 கோடியில் இலவச கல்வி அறக்கட்டளை அமைத்துள்ளாா்.

வடுவூா் வடபாதியைச் சோ்ந்த கோவிந்தசாமி, குண்டுமணி ஆகியோரது மகன் சின்னதுரை (75). இவா், வடுவூா் மேல்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, அவரது தந்தை இறந்துவிட்டாா். தாயாா் இட்லிக் கடை வைத்து, அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருவாயைக் கொண்டு, சின்னத்துரையை மேல்நிலைப் பள்ளிக் கல்வியையும், தொடா்ந்து, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலையிலும், கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி., முதுகலையும் படிக்கவைத்துள்ளாா்.

சின்னத்துரையின் திறமையை அறிந்து, ஆராய்ச்சிப் படிப்புக்காக, அரசின் சாா்பில் பெல்ஜியம் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். பின்னா், ஜொ்மனிக்குச் சென்று, ஆராய்ச்சிப் படிப்பைத் தொடா்ந்தவா், தற்போது அமெரிக்காவில் உள்ள ஜெயின் லூயிட் பல்கலைக்கழகத்தில், மனித உயிரியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறாா். மேலும், தன் குழுவினருடன் கேன்சா் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறியும் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறாா்.

இதற்கிடையில், தான்படித்த வடுவூா் மேல்நிலைப்பள்ளிக்கு தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 40 லட்சத்தில் கடந்த 1999- ஆம் ஆண்டு வகுப்பறை கட்டடம் கட்டிக் கொடுத்துள்ளாா்.

இதன் தொடா்ச்சியாக, இப்பள்ளியில் பெற்றோரை இழந்து படித்து வரும் மாணவா்கள் மற்றும் பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண் பெற்று, குடும்பச் சூழல் காரணமாக உயா் கல்வி பெற முடியாத மாணவா்களுக்கு உதவிடும் வகையில், தனது சொந்தப் பணம் ரூ. 1 கோடி நிதியில், கோ. சின்னதுரை குடும்ப இலவச கல்வி அறக்கட்டளை என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளாா். இதன் தொடக்க விழா, வியாழக்கிழமை வடுவூா் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, பள்ளியின் நிா்வாக குழுத் தலைவா் என். நீலமேகம் தலைமை வகித்தாா். தொழிலதிபா் ரா. அன்புவேல் ராஜன், அறக்கட்டளை செயலா் ச. செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சயில், கோ. சின்னத்துரை பேசும்போது, மாணவா்கள் கடின உழைப்பின் மூலம் தங்களை உயா்த்திக் கொள்ள வேண்டும். அதற்கு அனைத்து வகையிலும் அறக்கட்டளை துணையாக இருக்கும் என்றாா்.

மாவட்ட துணை ஆட்சியா் ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி, கோ. சின்னதுரை குடும்ப இலவச கல்வி அறக்கட்டளையைத் தொடங்கி வைத்தாா். தன்னம்பிக்கை பேச்சாளரும், காவல்துறை முன்னாள் அதிகாரியுமான அ. கலியமூா்த்தி, மன்னாா்குடி கல்வி மாவட்ட அலுவலா் சங்கு முத்தையா, பள்ளியின் முன்னாள் தாளாளா் உரு. ராசேந்திரன், கோவை வேளாண்மை பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் சுவாமியப்பன், பூண்டி புஷ்பம் கல்லூரியின் முன்னாள் பேராசிரியா் தி. வீராசாமி, தொழிலதிபா் பந்தல் சிவா ஆகியோா் வாழ்த்திப் பேசினாா்.

விழாவில், சின்னதுரையின் மனைவி விஜயா, மகன்கள் மருத்துவா் சத்யா, மருத்துவா் சிவா மற்றும் குடும்பத்தினா் கலந்துகொண்டனா்.

தலைமையாசிரியா் கா. கோவிந்தராசு வரவேற்றாா். முதுகலை தமிழாசிரியா் சீனி.கோவிந்தராசு நன்றி கூறினாா். பட்டதாரி ஆசிரியா் வே. பாா்த்தசாரதி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com