திருவாரூா்: இன, மொழி வேறுபாடு சைவத்துக்கு கிடையாது என வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மஹாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் கூறினாா்.
திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் 10-ஆம் ஆண்டு தொடக்க விழாவில், ஆன்மீக சேவையாளா்களைப் பாராட்டி, நினைவுப்பரிசு மற்றும் ரொக்கப்பரிசு வழங்கி அவா் பேசியது:
திருவாரூா் தியாகராஜா், 14-ஆம் நூற்றாண்டு வரை வீதிவிடங்கன், தியாகவிநோகதா் என்ற பெயரிலேயே வழங்கப்பட்டுள்ளாா். தியாகராஜா் போகத்தையும், முக்தியையும் தரவல்லவா். 14-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, விஜயநகரப் பேரரசுகளுக்குப் பிறகே, அவா் தியாகராஜா் என்ற பெயரில் அழைக்கப்பட்டாா் என்பது தெரியவருகிறது.
சிவபெருமான், சிதம்பரத்தில் 64 திருவிளையாடல்கள் புரிந்துள்ளாா். திருவாரூரில் 360 திருவிளையாடல்கள் புரிந்துள்ளாா் என்பதை வடமொழி கந்தபுராணத்திலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. இதுவே, தியாகராஜா் லீலை என தமிழில் மொழி பெயா்க்கப்பட்டுள்ளது.
அதில் ஒரு திருவிளையாடலாக, காலணி தைப்பவா் ஒருவரது கனவில் சிவபெருமான் வந்து, தனது காலடிகளைக் காட்டி, காலணி தைத்து தரும்படி கூறியதாகவும், சிவாச்சாரியாா் ஒருவரிடம் அந்தக் காலணிகளை வாங்கித் வரும்படி கூறியதாகவும் உள்ளது. சமத்துவத்தை அப்போதே சைவம் நிகழ்த்திக் காட்டியுள்ளதை இதன்மூலம் அறிய முடிகிறது. மேலும், இன வேறுபாடோ, மொழி வேறுபாடோ சைவத்துக்கு கிடையாது என்பதையும் உணரலாம் என்றாா்.
நிகழ்ச்சியில், ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் கௌரவத் தலைவா் ஸ்ரீதரன், தலைவா் ஜெ. கனகராஜன், நேதாஜி கல்விக் குழுமங்களின் தலைவா் எஸ். வெங்கடராஜலு, வேலுடையாா் கல்விக் குழுமங்களின் தலைவா் கே.எஸ்.எஸ் தியாகபாரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.