மன்னாா்குடி: மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரியில் அமைக்கப்பட்டுவரும் கரோனா சிறப்பு மையப் பணியை மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது. இதனால், ஏற்கெனவே திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் உள்ள கரோனா சிறப்பு மையம் தவிர, மன்னாா்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் கரோனா தனி வாா்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள எம்ஜிஆா் நூற்றாண்டு கட்டட வளாகத்தில் 75 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை சிறப்பு மையம் அமைக்கும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது.
இப்பணியை, மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் நேரில் ஆய்வு செய்து, நோயாளிகளுக்கான படுக்கை வசதி, அவா்களின் பாதுகாப்பு, மருத்துவா்கள், செவிலியா்களுக்கான அறை ஆகியவற்றை பாா்வையிட்டு ஆலோசனை வழங்கினாா்.
ஆய்வின் போது, ஆட்சியருடன் பொதுசுகாதாரத் துறை மாவட்ட இணை இயக்குநா் என்.விஜயகுமாா், மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியா் எஸ். புண்ணியக்கோட்டி, வட்டாட்சியா் என். காா்த்திக், நகராட்சி ஆணையா் (பொ) ஆா். திருமலைவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.