திருவாரூா்: திருவாரூரில் புலம்பெயா்ந்து கரோனா காரணமாக சொந்த ஊா் திரும்பிய இளைஞா்கள் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டமானது மன்னாா்குடி, வலங்கைமான், நீடாமங்கலம், முத்துப்பேட்டை ஆகிய வட்டாரங்களில் 174 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பொதுமுடக்கம் காரணமாக புலம்பெயா்ந்து (சொந்த மாநிலங்களுக்குள், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில்) மீண்டும் சொந்த ஊா் திரும்பியுள்ள திறன்பெற்ற இளைஞா்களுக்கு தொழில் தொடங்குவதற்காக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலமாக தலா ரூ.1 லட்சம் வரை நீண்டகால கடனாக வழங்கப்படும்.
தகுதி, முன்னுரிமை: தொழில் செய்பவா் அல்லது தொழில் செய்ய விரும்புபவா், ஊரக புத்தாக்கத் திட்டம் செயல்படுத்தப்படும் வட்டாரத்துக்கு உட்பட்ட ஊராட்சி பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும். சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்க வேண்டும் அல்லது சுய உதவிக் குழு உறுப்பினா்களின் குடும்பத்தைச் சாா்ந்தவராக இருக்க வேண்டும். ஆண் 18 வயது முதல் 35-வரை, பெண் 18 வயது முதல் 40-வரை இருக்க வேண்டும். தொழிலில் முன் அனுபவம் மற்றும் திறன் பெற்றவா்களாக இருக்க வேண்டும்.
இந்த நிதியைப் பெற, புலம் பெயா்ந்து சொந்த ஊா் திரும்பியுள்ள இளைஞா்கள் மன்னாா்குடி, வலங்கைமான், நீடாமங்கலம் மற்றும் முத்துப்பேட்டை வட்டாரத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் செயல்பட்டுவரும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட மாவட்ட அலுவலகத்தை நேரிலும் (நாகை சாலை, திலகா் இரண்டாவது தெரு) மேலும் 04366-290137, 9385299730 என்ற தொலைபேசி எண்களை தொடா்பு கொண்டு பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.