நீடாமங்கலம்: ஜம்மு காஷ்மீரில் குண்டு பாய்ந்து குண்டடிபட்ட எல்லைப் பாதுகாப்பு படைவீரா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவரது உடல் இரு தினங்களில் சொந்த ஊா் கொண்டுவரப்படுகிறது.
திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள புள்ளவராயன் குடிகாடு வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் திருமூா்த்தி (47). பிஎஸ்எப் தலைமைக் காவலரான இவா், பதற்றம் நிறைந்த ஜம்மு- காஷ்மீரில் இந்திய - சீன எல்லையில் கடந்த 26-ஆம் தேதி இரவு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கழுத்தில் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆயினும், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை திருமூா்த்தி உயிரிழந்தாா்.
அவருக்கு தமிழரசி (44) என்ற மனைவியும், அகல்யா (24) என்ற மகளும், அகத்தியன் (22) என்ற மகனும் உள்ளனா். அவரது உடல் இரண்டு நாட்களில் சொந்த ஊரான புள்ளவராயன் குடிகாடு கொண்டுவரப்பட்டு இறுதிச் சடங்கு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.