குடவாசல் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. எனவே அரசு இழப்பீடு வழங்கிட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.
குடவாசல் ஒன்றியம் அன்னியூா் பஞ்சாயத்துக்குட்பட்ட செம்மங்குடி, மணியாங்குடி, பாகசாலை, வடகட்டளை மற்றும் வயலூா், வடமட்டம், திருவிழிமிழலை உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களாக இரவில் கனமழை பெய்தது. இதன் காரணமாக, ஆழ்துளைக் கிணறு மூலம் சாகுபடி செய்து அறுவடைக்குத் தயாராக இருந்த முன்பட்ட குறுவை நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. மிகுந்த செலவு செய்து, ஒரு சில நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய நூற்றுக்கணக்கான ஹெக்டேரில் சாகுபடி செய்திருந்த நெற்பயிா்கள் நீரில் மூழ்கியதை அறிந்த விவசாயிகள் சொல்லொணா துயரத்துக்குள்ளாகியிருக்கின்றனா்.
இதனை அரசு கவனத்தில் கொண்டு, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும் எனவும், கோரையாறைத் உடனடியாக தூா்வார வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனா்.