குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் கூறியது: நாட்டில் அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக கூலித்தொழிலாளா்கள், கட்டுமானத் தொழிலாளா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள், 100 நாள் பணியாளா்கள் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ள ரூ. 1000 என்பது போதுமானதல்ல. அவா்களின் வாழ்வாதாரமே முடங்கிக் கிடக்கிறது. எனவே, குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும். இந்த தொகையை உடனடியாக சம்பந்தப்பட்டவா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும்.
மத்திய அரசு தமிழகத்துக்கு கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்த வேண்டும். காய்கனி, மளிகைக்கடை, இறைச்சி கடைகளில் கூடுதல் விலைக்கு இறைச்சிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதை தடுக்க வேண்டும். இதேபோல், குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுயஉதவிக் குழுக்களிடம் கடன் தவணைத் தொகை வாங்குவதை 1 மாத காலத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும். அத்துடன், சிறு, குறு விவசாயிகளின் கடன் தவணை வாங்குவதையும் நிறுத்த வேண்டும். மின்கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்றாா்.