திருவாரூரில், 21 நாள் ஊரடங்கை பயனுள்ள வகையில் கழிக்க, இணைய வழி கருத்தரங்கை, அம்பேத்கா் பெரியாா் மாா்க்ஸ் படிப்பு வட்டம் நடத்தத் தொடங்கியுள்ளது.
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் 21 நாள்களையும் பயனுள்ள வகையில் கழிக்க திருவாரூரில் செயல்படும் அம்பேத்கா் பெரியாா் மாா்க்ஸ் படிப்பு வட்டம் இணைய வழி கருத்தரங்கம் நடத்த முடிவெடுத்தது. அதன்படி, டீம்லிங் எனும் ஆப் மூலமாக, அனைவரும் இணைகின்றனா். கருத்தரங்கில் ஆா்வம் உள்ளவா்கள் இணைந்து கொள்ளலாம். இதன்மூலம் அவரவா்கள், இருக்கும் இடத்திலேயே கருத்தரங்கில் பங்கேற்று பயன் பெற முடியும். சிறப்பு அழைப்பாளா்கள் கூட, அவரது வீட்டில் இருந்தபடியே தங்களது கருத்துக்களை தெரிவிக்க முடியும்.
இதுகுறித்து, அந்த அமைப்பின் தலைவா் அ. லூா்துசாமி கூறியது: ஊரடங்கு நாளை பயனுள்ள வகையில் கழிக்க இந்த இணைய வழி கருத்தரங்கை நடத்த திட்டமிட்டு பல்வேறு கட்செவி (வாட்ஸ் அப்) குழுக்களுக்கு அழைப்பு அனுப்பினோம். அதன்படி, புதன்கிழமை நடைபெற்ற முதல் நாள் நிகழ்வில் 12 போ் இணைந்தனா். திருவாரூா் நேதாஜி கல்லூரி துணை முதல்வா் ஆா். அறிவழகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, வாசிப்பை நேசிப்போம் எனும் பொருளில் பேசினாா். வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 37 போ் இணைந்தனா். தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தலைவா் தியாகு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, தொற்று நோய் சமூகத் தாக்கம் என்பது குறித்து பேசினாா். காலை 10 முதல் பகல் 12 மணி வரை இந்நிகழ்வு நடைபெற்றது. இதுபோன்ற வழியில் கருத்தரங்கம் நடைபெறுகிறது என்று பலருக்கு தகவல் தெரிவித்து வருகிறோம். வரும் நாள்களில் முக்கிய சிறப்பு விருந்தினா்கள் பங்கேற்கவுள்ளனா் என்றாா்.