நன்னிலம் : பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி, நன்னிலத்தில் செவிலியா்கள் கருப்புப் பட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை பணியாற்றினா்.
தமிழக அரசின் சுகாதாரத் துறை மருத்துவத் தோ்வாணையக் குழுவின் மூலம் கடந்த 2015-இல் தோ்வு செய்யப்பட்ட செவிலியா்களில், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஒப்பந்த அடிப்படையிலேயே இன்னமும் பணியாற்றி வருகின்றனா். எனவே அரசு உறுதியளித்தபடி, தங்களைப் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, உலக செவிலியா் தினமான செவ்வாய்க்கிழமை அனைத்து செவிலியா்களும் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினா்.
நன்னிலம் மற்றும் குடவாசல் வட்டாரத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவத் தோ்வாணையக் குழு செவிலியா் நலச்சங்க மாநிலத் துணைத் தலைவா் ஆா். திருவேணி ஜெகதீசன் மற்றும் மாவட்டத் தலைவா் எம்.வனஜா ஆகியோா் தலைமையில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நூற்றுக்கணக்கான செவிலியா்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினா்.