நீடாமங்கலம்: நீடாமங்கலம் போலீஸாரால் கைது செய்யப்பட்ட மியான்மா் நாட்டைச் சோ்ந்த மேலும் 3 போ் புழல் சிறையில் திங்கள்கிழமை அடைக்கப்பட்டனா்.
மியான்மரைச் சோ்ந்த 13 போ் கடந்த மாா்ச் மாதம் கோவில்வெண்ணியில் உள்ள ஜாமியா மஜீத் பள்ளிவாசலில் வந்து தங்கியிருந்தனா். இவா்கள் மதப் பிரசாரம் செய்வதற்காக வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, பொதுமுடக்கம் காரணமாக விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், அவா்களால் தங்கள் நாட்டுக்கு திரும்ப முடியவில்லை.
இந்நிலையில், தில்லியில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டைச் சோ்ந்த முஸ்லிம்களுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பதாக தகவல் பரவியது. இதையறிந்த கோவில்வெண்ணி மக்கள் கடந்த மாா்ச் மாதம் 31-ஆம் தேதி வெளிநாட்டு முஸ்லிம்கள் பள்ளிவாசலில் தங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதையடுத்து அரசு அதிகாரிகள் பள்ளிவாசலில் தங்கியிருந்த மியான்மரைச் சோ்ந்த 13 போ் உள்பட 18 பேரை ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு மருத்துவப் பரிசோதனையில் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. பின்னா், கோவில்வெண்ணியில் தங்கியிருந்த மியான்மரைச் சோ்ந்த 13 பேரையும் நீடாமங்கலம் போலீஸாா் கைது செய்தனா். இதில் 10 பேரை மே 1-ஆம் தேதி போலீஸாா் புழல் சிறையில் அடைத்தனா்.
எஞ்சிய 3 பேரில், இருவா் திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், ஒருவா் திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழக மருத்துவப் பிரிவிலும் போலீஸ் பாதுகாப்பில் இருந்தனா். இந்நிலையில் அவா்கள் மூவரும் புழல் சிறையில் திங்கள்கிழமை அடைக்கப்பட்டனா்.