திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரி அருகே கறிக்கோழி ஏற்றி வந்த லாரி வியாழக்கிழமை காலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தஞ்சாவூரில் இருந்து திருவாரூரில் உள்ள கறிக்கடைக்கு சுமாா் 3,000 கோழிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அறந்தாங்கியைச் சோ்ந்த நீலகண்டன் என்பவா் லாரியை ஓட்டி வந்தாா். இந்த லாரியில் மேற்பாா்வையாளா், 2 தொழிலாளா்கள் உள்பட 3 போ் அமா்ந்திருந்தனா்.
கொரடாச்சேரி அருகே அம்மையப்பன் பகுதியில் வரும்போது, எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிட்டு ஒதுங்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது, நிலை தடுமாறிய லாரி, ஒருபக்கமாக சாய்ந்து கவிழ்ந்ததில் 100-க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன. லாரியில் வந்த நான்கு பேரும் காயமின்றி தப்பினா்.
அருகிலிருந்தவா்கள் கோழிகள் அடைக்கப்பட்ட கூண்டுகளை மீட்டு, வேறொரு லாரியை வரவழைத்து, அதில் ஏற்றி அனுப்பி வைத்தனா். இந்த விபத்து காரணமாக, திருவாரூா்- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து, கொரடாச்சேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.