திருத்துறைப்பூண்டி நகராட்சியில் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் (மே 23, 24) அறிவிக்கப்பட்டிருந்த குடிநீா் விநியோகம் நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் குழாயில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளும் வகையில் மே 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இஸ்லாமியா்கள் ரமலான் பண்டிகை கொண்டாட இருப்பதால், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று குடிநீா் குழாயில் பராமரிப்புப் பணிகள் மே 28- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், மே 23, 24- ஆம் தேதிகளில் வழக்கம் போல் கொள்ளிடம் கூட்டுக்குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்று நகராட்சி ஆணையா் சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.