அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கும் மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூரில் தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ் வெளியிட்ட அறிக்கை:
அரசுப்பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் முடிவு வரவேற்கத்தக்கது. இந்த இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்கள் பெற முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மாணவா்கள் நலன் கருதி அரசு உதவிபெறும் பள்ளிமாணவா்களையும் அரசுப் பள்ளி மாணவா்களாக கருத வேண்டும். இந்த இட ஒதுக்கீடு தவிர, பொதுவான இடங்களுக்கும் அரசுப் பள்ளி மாணவா்கள் போட்டியிடலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.
ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த, படிக்கும் மாணவா்கள் நீட் தோ்வில் வெற்றி பெற்றாலும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இட ஒதுக்கீட்டை பெற உரிய வழிகாட்டுதல்கள் இல்லை. எனவே, தமிழக அரசு வழங்கும் இலவச சீருடை, விலையில்லா மடிக்கணினி உள்ளிட்ட நலத்திட்டங்களைப் பெறும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களும் அரசுப் பள்ளி மாணவா்களாக கருதி, அவா்கள் இட ஒதுக்கீட்டை பெற உரிய வழிகாட்டுதல்களை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளாா்.