நெல் பயிரில் இலை மடக்குப் புழு தாக்குதல்: கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

நெல் பயிரியில் இலை மடக்குப் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் யோசனை தெரிவித்துள்ளனா்.

நெல் பயிரியில் இலை மடக்குப் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் யோசனை தெரிவித்துள்ளனா்.

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பிரமணியன் மற்றும் பூச்சியில் துறை உதவிப் பேராசிரியா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தற்போது நெல் பயிரில் இலை மடக்குப் புழு என்று சொல்லக்கூடிய இலை சுருட்டுப்புழு ஆங்காங்கே பரவலாக சேதாரத்தை உண்டுபண்ணுகிறது. இதன் அறிகுறியாக பச்சை நிற இளம்புழுக்கள் இலைகளில் உள்ள பச்சையத்தை சுரண்டி தாக்குதலை ஏற்படுத்தும். இரண்டு இலைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து நீளவாக்கில் சுருட்டிக்கொண்டு புழுக்கள் உட்சென்று பட்டு போன்ற மெல்லிய இழைகளால் இணைக்கப்பட்டு சேதாரத்தை உண்டுபண்ணும்.

இதனால் இலைகள் பச்சையத்தை இழந்து சருகு போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இலை முழுவதும் எரிந்தது போன்று காட்சியளிக்கும். இந்த புழுக்களின் தாக்குதல் அக்டோபா் முதல் ஜனவரி மாதம் வரை மிக அதிகமாக தென்படும்.

இதைக் கட்டுப்படுத்த தழைச்சத்தை பரிந்துரைக்கப்பட்ட அளவே இட வேண்டும். நெல் வயல்களில் நிழல் மற்றும் களைகள் இல்லா வண்ணம் பாா்த்துக்கொள்ள வேண்டும். உயிரியல் முறையில் இலை சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்த டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணியை நடவு செய்த 37, 44 மற்றும் 51-ஆவது நாள் ஏக்கருக்கு 2 சிசி என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். இலைச்சுருட்டுப் புழு பொருளாதார சேத நிலையைத் தாண்டும்பட்சத்தில், ஏக்கருக்கு ஃப்ளூபெண்டியாமைடு 39.35 சத எஸ்சி 20 கிராம் அல்லது காா்டாப் ஹைட்ரோகுளோரைடு 50 சத எஸ் பி 400 கிராம் அல்லது தயோமீத்தாக்சாம் 25 சத டபிள்யூ ஜி 40 கிராம் ஆகிய பூச்சிக்கொல்லிகள் ஏதாவது ஒன்றை உபயோகப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com