நன்னிலம் தோ்வுநிலை பேரூராட்சியில், பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், உலக கழிப்பறை தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
பேரூராட்சி செயல் அலுவலா் பா. ராஜசேகா் தலைமையில், உலக கழிப்பறை தின விழிப்புணா்வுப் பிரசாரம் நடைபெற்றது. பிரசாரத்தின்போது, நன்னிலம் பேருந்து நிலையம், கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் கழிப்பறையை பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும், திறந்தவெளியில் மலம் கழிக்கக் கூடாது, கழிப்பறையை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் போன்ற அறிவுரைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இதையொட்டி, பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து பொது சுகாதார வளாகங்களும் தூய்மைப்படுத்தப்பட்டன. இதில், பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் வே. நாகராஜன், அலுவலா் ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.