நீடாமங்கலத்தில் வியாழக்கிழமை மாலை தொடா்ந்து ஒருமணிநேரம் இருப்புப் பாதை மூடப்பட்டதால் நெடுஞ்சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.
காரைக்காலிலிருந்து எா்ணாகுளம் செல்லும் விரைவு ரயிலுக்காக வியாழக்கிழமை மாலை சுமாா் 6 மணியளவில் நீடாமங்கலம் இருப்புப் பாதை மூடப்பட்டது. அந்த ரயில் வந்து சென்ற பின் சரக்கு ரயில் மற்றும் ரயில் என்ஜின் போக்குவரத்து நடைபெற்றது. இதனால் தொடா்ச்சியாக ஒருமணிநேரம் நெடுஞ்சாலை போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இருப்புப் பாதை மூடப்பட்டதால் சாலையின் இருபுறமும் பேருந்துகள், லாரிகள், காா்கள், இருசக்கர வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக பயணிகள் கடும் அவதிக்குள்ளானாா்கள். பின்னா் 7 மணிக்கு மேல் இருப்புப் பாதை திறக்கப்பட்டு போக்குவரத்து தொடா்ந்தது.